ஸிகா வைரஸ் தமிழகத்தைப் பாதிக்குமா?
வெளிநாடுகளில் கொசுக்களால் பரவும் ஸிகா வைரஸ் நோய் தமிழகத்தைத் தாக்கக் கூடுமா என்பதற்கு பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை உதவி இயக்குநர்கள் கூட்டத்தில் தகவல் அளிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் முதன்முதலில் 1947-ஆம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஸிகா (ழண்ந்ஹ) என்ற காட்டில் கண்டறியப்பட்டது. அதனால், இதற்கு ஸிகா வைரஸ் என்று பெயரிடப்பட்டது. டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களால்தான் இந்த வைரஸும் பரவுகிறது.
ஆப்ரிக்காவிலும், ஆசியக் கண்டத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதன் பாதிப்பு இருந்து வந்தது. 2007-ஆம் ஆண்டு மேற்கு பசிபிக் பெருங்கடலில் அருகில் உள்ள யாப் என்ற தீவில் வசித்த 75 சதவீதம் பேரை இந்த வைரஸ் தாக்கியது.
அதன்பிறகு, 2015-ஆம் ஆண்டு மேதம் மாதம் பிரேசிலில் இந்த வைரஸ் தாக்கியதை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது.
அறிகுறிகள்: காய்ச்சல், தோலில் அரிப்பு, கண் நோய், எலும்பு மூட்டுகளில் வலி, உடல் சோர்வு போன்ற சாதாரண அறிகுறிகளே தோன்றும். இந்த வைரûஸ சுமந்து வரும் ஏடிஸ் கொசுக்கள் கடித்த 2 முதல் 7 நாள்களில் இந்த அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். ஸிகா வைரûஸ சுமந்து வரும் கொசுக்கள் கடித்த நான்கில் ஒருவருக்குதான் பாதிப்பு ஏற்படும். ஏடிஸ் வகை கொசுக்கள் நல்ல நீரில் இனப்பெருக்கம் செய்யும். காலை, பிற்பகல் வேளைகளில் இந்த வகை கொசுக்கள் கடிக்கும்.
கர்ப்பிணிகளிடமிருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு பெண் கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், பிறக்கும் குழந்தையானது மரபணு, நரம்பியல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த வைரஸால் தாக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பிறக்கும் குழந்தையின் தலை சிறியதாக காணப்படுகிறது.
பிரேசிலில் பாதிப்பு: லத்தீன் அமெரிக்காவில் பிரேசில், பார்படாஸ், பொலிவியா, கௌதமாலா, பியூர்டோரிக்கோ, பனாமா உள்பட 20 நாடுகளில் ஜிக்கா வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் பாதிப்புகளால் பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீதி வேண்டாம்: ஸிகா நோய் என்பது டெங்கு காய்ச்சலைப் போன்று அதிக வீரியம் மிக்கது அல்ல. ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறத் தொடங்கினால் அதை எளிதாககக் குணமாக்கிவிடலாம். பிற வைரஸ் காய்ச்சலைப் போன்று இதுவும் சாதாரண வைரஸ் பாதிப்புதான் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:
தமிழத்தைப் பொருத்தவரை, தொற்றுநோய்களைத் தடுக்கும் வகையில் அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன. ரத்தப் பரிசோதனையின் மூலம் ஸிகா வைரஸ் பாதிப்பு இருந்தால் அவற்றை எளிதில் கண்டறிய முடியும். நோய் உறுதி செய்யப்பட்டால் அவற்றை தற்போது புழக்கத்தில் இருக்கும் மருந்து, மாத்திரைகளைக் கொண்டே அவற்றை எளிதில் குணப்படுத்த முடியும்.
தமிழக பொது சுகாதாரத் துறை இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் கூட்டத்தில் ஸிகா வைரஸ் குறித்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
துறைமுகம், விமான நிலையம்: தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் சுகாதார அலுவலர்கள் பணியில் இருப்பர். துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களில் ஏடிஸ் கொசுக்கள் இனப் பெருக்கம் உள்ளதா, கப்பலில் பயணித்தவர்களுக்கு யாருக்கேனும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளனவா என்று கண்டறிந்து, ஆய்வு செய்து சான்று அளித்த பிறகே கப்பல்கள் துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்படும்.
மேலும், விமான நிலையங்களில் பணியில் உள்ள சுகாதார அலுவலர்களும் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பதைப் பரிசோதித்து அறிவார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு இருந்த போது, தமிழக விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகள் இப்போதும் தொடரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
ஸிகா உள்ளிட்ட வைரஸ் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மருத்துவர்கள் கூறும் வழிமுறைகள்
* வீடுகள், அதைச் சுற்றியுள்ள பகுதிகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கக் கூடாது.
* வீட்டு சுற்றப்புறத்தில் உடைந்த குடங்கள், வாளிகள், தேங்காய் மட்டை உள்ளிட்டவற்றை சேமித்து வைக்கக் கூடாது.
* கொசுக்கள் முட்டையிட்டுள்ள தண்ணீரை எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.
* கொதித்து ஆற வைத்த நீரைப் பருக வேண்டும்.
* காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
* சுய மருத்துவம், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துக் கடைகளுக்குச் சென்று மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது.
* குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
* உடலையும், வசிக்கும் பகுதிகளையும் சுத்தமாகப் பராமரிப்பதன் மூலம் ஸிகா, டெங்கு உள்ளிட்ட அனைத்து வைரஸ் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக