மாற்றுத்திறனாளிகளுக்கு 10 நாளில் கூடுதல் வசதிக்கான செயல் திட்டம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
அரசு கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு நடைபாதை, கைப்பிடி உள்ளிட்ட கூடுதல் வசதிகளை செய்து கொடுக்க 10 நாட்களுக்குள் செயல் திட்டம் உருவாக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், ராஜீவ்ராஜன், ஞானசம்பந்தம் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்துள்ள
பொதுநல மனுக்களில் கூறியிருப்பதாவது:-
வசதிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான சமவாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் முழு வாய்ப்பு சட்டத்தின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு தகுந்த உதவிகளை செய்துக் கொடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும். அரசு அலுவலகங்களில் சாய்வு நடைபாதை இல்லாததால், மாற்றுத்திறனாளிகள் அங்கு செல்ல முடியவில்லை.
அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கு கஷ்டப்படுகின்றனர். அவர்கள் எளிதில் பஸ்சில் ஏற, ‘லிப்ட்’ வசதி செய்துக் கொடுக்க வேண்டும். இதுதொடர்பான ஒருங்கிணைந்த விதிகளை உருவாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
சாய்வு நடைபாதை
இந்த வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பல அரசு அலுவலகக் கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக சாய்வு நடைபாதை, கைப்பிடி போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக அரசு கூறியுள்ளது.
இதுதவிர மாற்றுத்திறனாளிகளுக்கு செய்து தரவேண்டிய கூடுதல் வசதிகள் குறித்த தகவல்கள் அடங்கிய கையேடு ஒன்றினை மத்திய பொதுப்பணித் துறை வெளியிட்டுள்ளது. இந்த கையேட்டில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆஜராக வேண்டும்
இதற்காக மத்திய பொதுப்பணித்துறை, மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள், இவ்வழக்கில் ஐகோர்ட்டுக்கு உதவுவதற்காக ஏற்கனவே நியமிக்கப்பட்ட வக்கீல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் ஆகியோர் 10 நாட்களுக்குள் கூட்டம் நடத்தி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அரசு அலுவலகக் கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுப்பது குறித்து செயல் திட்டம் கிடைக்கும். இந்த வழக்கு விசாரணையை வருகிற மார்ச் 11-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அப்போது, தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் நேரில் ஆஜராகவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக