தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் யார்? - ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் வகுத்திருந்த வரையறைகள்
பதினைந்தாவது தமிழக சட்டப் பேரவை உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்கான தேர்தலில் தமிழகம் திமிலோகப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், 1000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டை தமிழர்கள் கடைபிடித்த தேர்தல் நடத்தை விதிகளை புரட்டிப் படித்தால் பிரமிக்க வைக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ளது வைகுந்த பெருமாள் கோயில். இந்தக் கோயிலில், கி.பி.907-ல் பராந்தக சோழன் 2 கல்வெட்டுகளை வைத்திருக்கிறான். பராந்தகனின் 12 மற்றும் 14-ம் ஆட்சி ஆண்டுகளில் வைக்கப்பட்ட இந்த கல்வெட்டுகளில், பண்டைக் காலத்தில் வழக்கத்தில் இருந்த குடவோலை தேர்வு முறை, வேட்பாளர்கள் தகுதி மற்றும் தேர்வு நடத்தும் முறைகள் தெளிவாக விளக்கப்பட் டுள்ளன.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய வரலாற்று ஆய்வாளரும் சேலம் ஆத்தூர் அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியருமான ஜே.ஆர்.சிவராம கிருஷ்ணன், “மன்னராட்சியில் உள்ளாட்சி நிர்வாகங்கள்தான் மக்களோடு நேரடி தொடர்பில் இருந்திருக்கின்றன. அதனால், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒழுக்க நெறி தவறாதவர்களாகவும் நாணயமானவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதில் மன்னர்கள் மிகக் கவனமாக இருந்திருக்கிறார்கள்.
30 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான உத்திர மேரூர் உள்ளாட்சி தேர்தலில் பின்பற்றப்பட்ட நடவடிக்கைக ளைத்தான் வைகுந்த பெருமாள் கோயில் கல்வெட்டு விளக்குகிறது. உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவி காலம் 360 நாட்கள். இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் அரசுக்கு வரி செலுத்தும் வகையில் கால்வேலி நிலமாவது சொந்தமாக வைத்திருக்க வேண்டும். தமது சொந்த மனையில் வீடுகட்டி வசிக்க வேண்டும். அதாவது மண்ணின் மைந்தராக இருக்க வேண்டும். வயது வரம்பு 30-லிருந்து 60 வயதுக்குள். தூயவழியில் பொரு ளீட்டி அறவழியில் நடப்பவராக இருப்பதுடன் உள்ளாட்சி வாரி யத்தில் முறையாக கணக்குக் காட்டியவராகவும் இருக்க வேண்டும்.
நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும். முந்தைய மூன்றாண்டுகளில் உள்ளாட்சி வாரிய உறுப்பினராக இருந்திருக்கக் கூடாது. அதாவது ஒருமுறை பதவிக்கு வந்தவர்கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
மேலும், வாரிய உறுப்பினர்களுக்கோ அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கோ எந்த விதத்திலும் உறவினராக இருத்தல் கூடாது’’ என்று சொன்ன சிவராமகிருஷ்ணன், யாரெல்லாம் தேர்தலில் நிற்பதற் கான உரிமையை இழந்தவர்கள் என்பதற்கான மன்னர்களின் வரையறைகளையும் பட்டியலிட் டார்.
“வாரிய உறுப்பினர்களாக இருந்து முறையாக கணக் குக் காட்டாதவர்கள்; இவர்க ளது உறவினர்கள், கூடத் தகாதவர்களுடன் சேர்ந்திருப் பவர்கள். பஞ்சமா பாதகங்களைச் செய்தவர்கள்; இவர்களுக்கு நெருங்கிய உறவுகள், தீயோர் கூட்டுறவினால் கெட்டுப் போனவர்கள், லஞ்சம் பெற்று பிறகு பிராயச்சித்தம் அடைந்து தூய்மை பெற்றவர்கள், கள்ளக் கையெழுத்துப் போட்டு தவறு செய்தவர்கள். இவர்கள் அத்தனை பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தகுதி இழந்தவர்கள்.
தகுதியான வேட்பாளர்கள் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் அத்தனை பேரின் பெயர்களையும் தனித் தனியாக ஓலையில் எழுதி ஒரு பானைக்குள் போட்டு பால்மணம் மாறா சிறுவன் ஒருவன் மூலமாக அதிலுள்ள ஓலைகளை ஒவ்வொன்றாக எடுக்க வைத்து உள்ளாட்சி நிர்வாகத்துக்கு தேவையான எண்ணிக்கையில் உறுப்பினர்களை தேர்வு செய்திருக்கிறார்கள்.
சிறுவன் எடுத்துத் தரும் ஓலைகளில் உள்ள நபர்களின் பெயர்களை தேர்தல் நடத்தும் அதிகாரியானவர், சபையோர் முன்னிலையில் உரக்கப் படிப்பார். இதுதான் உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டதுக்கான அங்கீகாரம். இப்படித்தான் அந்தக் காலத்தில் ஆட்சியாளர்களை தேர்வு செய்திருக்கிறார்கள். அதுபோன்ற சட்டத் திட்டங்கள் இந்தக் காலத்திலும் இருந்தால் எப்படி இருக்கும்?’’ என்ற கேள்வியோடு முடித்துக் கொண்டார் சிவராம கிருஷ்ணன்.
நன்றி: தி இந்து &
ஜே.ஆர்.சிவராம கிருஷ்ணன்
கருத்துகள்
கருத்துரையிடுக